எட்வர்ட் ஜார்ஜென்ட், Edward Sargent

 


கிறிஸ்து இரத்தம் சிந்தி சம்பாதித்து தந்த திருச்சபையை பேணிக் காப்பதில் முக்கிய பங்கு வகித்தவர் பேராயர் எட்வர்ட் சார்ஜென்ட். அவர் 1835 - ஆம் ஆண்டு நெல்லை பட்டணத்தில் தன்னுடைய ஊழியத்தை ஆரம்பித்தபோது இங்கு 224 திருச்சபைகள் இருந்தது. ஆனால் அவர் மரிக்கும்போது, அதாவது 1889 - ஆம் ஆண்டு அங்கிருந்த திருச்சபைகளின் எண்ணிக்கை 1008 ஆகும். திருச்சபையின் வளர்ச்சிக்கு வித்திட்டவர். அதுமட்டுமல்ல, சபைகள் அனைத்தையும் கிறிஸ்துவில் வேரூன்றச் செய்தவர். போதகர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை அதிகம் நேசித்தவர். அவர்களது குறைகளை நீக்கி, மகிழ்ச்சியோடு தேவனுக்காக பணி செய்ய ஊக்குவித்தவர். 

வாட்டர் லூ போரில் ஈடுபட்ட ஒரு போர் வீரனின் மகன் தான் எட்வர்ட் ஜார்ஜென்ட் - அப்பட்டாளம் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட போது சார்ஜென்ட் தன் பெற்றோருடன் வந்தார். போரில் அவரது தகப்பனார் மரித்து விட்டார். தனிமையிலிருந்த தாயார் தன் மகனை சென்னை இராணுவ குரு அருள்திரு. சாயர் அவர்களின் பொறுப்பில் விட்டுவிட்டு தன் தாய்நாட்டிற்குச் சென்றார். 1815 - ஆம் ஆண்டு அக்டோபர் 16 - ஆம் நாள் பாரீஸ் மாநகரத்தில் பிறந்த சார்ஜென்ட், சிறு வயதிலேயே கிறிஸ்தவ நெறியில் வளர்க்கப்பட்டார். சாயர் அவர்களும் சார்ஜென்டை தன் பிள்ளைகளுடன் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்தார். பள்ளி படிப்பை முடித்தவுடன் அவருக்கு அரசாங்கப்பணி எளிதாகக் கிடைக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அரசு பணி செய்வதை விட ஆண்டவருக்காக பணி செய்வது பெரும் பாக்கியம் என கருதி கிறிஸ்துவின் பணி செய்ய தீர்மானித்தார்.

சர்ச் மிஷனெரி சொசைட்டி ( The Church Missionary Society), தங்களுடைய பயிற்சி மையத்திற்கு சார்ஜென்டை அனுப்பி வைத்து, மிஷனெரிப் பணிக்கான முறையான பயிற்சியை அளித்தனர். பயிற்சி முடிந்தபின் CMSன் மிஷனெரியாக தன் பணியை இளமைப் பருவத்தில் தொடங்கினார். 1830-ம் ஆண்டு தன்னுடைய 18 ஆம் வயதில் ஊழியம் செய்ய ஆரம்பித்த இவர், போதகர்களைப் பயிற்றுவிக்கும் செமினரியில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இவரின் ஊழிய எல்லை விரிவானது. குருத்துவ பட்டம் பெறுவதற்காக தன் தாய் நாட்டிற்கு சென்றார். CMS மூலமாக இங்கிலாந்து கல்லூரியில் படித்து, குருத்துவ பட்டம் பெற்று, மறுபடியும் 1843 - ஆம் ஆண்டு இந்தியா வந்தார். திருநெல்வேலியில் கால் பதித்த அவரை, CMS நிறுவனம் முக்கிய பொறுப்புகளில் அமர்த்தி பயன்படுத்தினார்கள். ரேனியஸ் ஐயர் பிரிந்த காலம் அது. திருச்சபைகளுக்குள்ளாக காணப்பட்ட குழப்பங்கள் நீங்கி, அனைத்தும் சரிசெய்யப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், சார்ஜென்ட் தன் பொறுப்பை எடுத்தார். சிறுவயதிலேயே தமிழர்களோடு பழகியதால் தமிழ் கலாச்சாரத்தையும் மொழியையும் அதிகம் நேசித்தார். தமிழ் மொழியில் அழகாக பேசும்தன்மை உடையவரானார்.   

இந்தியாவில் உழைத்து, இந்திய மண்ணிலேயே தங்களை கோதுமை மணியாக ஒப்புக்கொடுப்பவர்கள் எத்தனை பேர் என்ற கேள்வி, எட்வர்ட் சார்ஜென்ட் போதகரை இந்தியாவில் நற்செய்தி பணியைச் செய்ய அதிகம் தூண்டியது. 54 ஆண்டுகள் நெல்லைப் பட்டணத்தில் தேவனுக்காக ஊழியம் செய்தார். நெல்லை திருமண்டலத்தை வடிவமைத்தவர் என்ற பெருமைக்கு உரியவர். அதற்காக அவர் கடினமாக உழைத்தார். முதன் முதலில் ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள புதுக்குடி என்ற கிராமத்தை முழுவதுமாக கிறிஸ்துவுக்கு வழி நடத்தினார். இக்கிராமத்தில் வாழ்ந்த 15 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 53 பேர்களும் கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு, திருச்சபையில் இணைந்தனர். இதுதான் இவர் ஆரம்பித்த முதல் திருச்சபையாகும். 

சுவிசேஷபுரத்தில் ஊழியம்: 

ஏற்கனவே ரேனியஸ் ஐயர் உருவாக்கிய திருச்சபைகளை ஒருங்கிணைப்பது, புதிய கிராமங்களை சந்தித்து சபைகளை விரிவாக்குவது என்று தன் காலமெல்லாம் இவற்றை மையமாக வைத்து போதகர் எட்வர்ட் சார்ஜென்ட் பணியாற்றி வந்தார். பின்பு சுவிசேஷபுரத்தின் திருச்சபைக்கு போதகராக பணி அமர்த்தபட்டார். சுவிசேஷபுரம் மற்றும் அதன் அருகிலுள்ள திருச்சபைகளை பொறுப்புடன் நடத்தி வந்தார். சபையின் தேவைகளை சந்திப்பதற்கு ஏற்படும் செலவுகளுக்கு சபைகள் போதகரையோ, மிஷனெரியையோ எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இது போதகர் சார்ஜென்ட்டை அதிகம் பாதித்தது. Local church fund (LCF) என்று இன்றும் நடைமுறையில் உள்ள திட்டத்தை அறிமுகம் செய்தார். அதாவது சபைக்கு வரும் ஒவ்வொரு குடும்பமும் ஒரு சிறிய தொகையை மாதந்தோறும் கொடுக்க வேண்டும் என்கிற திட்டத்தை அறிமுகம் செய்தார். அந்தந்த சபைகளே அதன் செலவுகளை சந்திக்க ஏற்பாடு செய்தார். 

வேதபாட வகுப்பு: 

இரண்டாவதாக, சார்ஜென்ட் சபை மக்கள் வேதாகமத்தை முறையாக கற்றுக்கொள்ள வேண்டுமென விரும்பினார். பல ஆண்டுகளாக சபையில் அங்கத்தினர்களாக இருப்பவர்கள், வேதத்தை பற்றிய அறிவில் குறைந்திருப்பதை கண்டு, அவர்களுக்கு முறையாக வேதத்தை கற்றுக் கொடுக்க முடிவு செய்தார். ஞாயிற்றுக்கிழமை ஆராதனைக்குப் பின் மதியம் 1:30 மணிக்கு சபை விசுவாசிகளுக்கு சபை ஊழியர்கள், போதகர், பள்ளி ஆசிரியர்கள் பயிற்சி அளித்தனர். இதனால் விசுவாசிகளுக்கு வேதத்தை குறித்த ஆர்வம் ஏற்பட்டு உற்சாகமாக சபையில் பங்கெடுத்து வந்தனர். ஆனால் விசுவாசிகளின் கரங்களிலோ போதுமான வேதாகமம் இல்லை. ஆகவே லண்டனிலுள்ள வேதாகம சங்கத்தை தொடர்பு கொண்டு, பாளையங்கோட்டையில் வேதாகம சங்கத்தின் கிளை ஒன்றை உருவாக்கச் செய்தார். இதனால் அனைத்து விசுவாசிகளின் கரங்களிலும் வேதாகமம் கிடைத்தது. அவரது பிரசங்கத்திற்கு அடிபணிந்தவர்கள் அநேகர். சார்ஜென்ட் அவர்கள் பிரசங்கம் செய்யும்போது ஒரேயிடத்திலிருந்து பிரசங்கிக்க மாட்டார். பிரசங்க வேளையில் அங்குமிங்கும் நடந்து, கேள்விகளைக் கேட்டுக்கொண்டே பிரசங்கிப்பார். பிரசங்க பீடத்தில் இவர் ஏறியவுடன், ஆலயத்தின் வெளியே நின்று கொண்டிருக்கும் புறஜாதி மக்களும் உள்ளே வந்து நின்று கொண்டு ஆவலோடு பிரசங்கத்தை கேட்பார்கள். அந்தளவிற்கு அர்த்தமுள்ளதாகவும், கேட்போர் இதயத்தை அசைப்பதாகவும் அவரது பிரசங்கம் இருக்கும். 


உபத்திரவத்தின் காலங்கள் :

திருச்சபைகள் உபத்திரவத்தின் நாட்களுக்குள் சென்றபோது போதகர் எட்வர்ட் சார்ஜென்ட் மக்களுக்கு துணையாக, பக்கபலமாக இருந்தார். 1840 - ஆம் ஆண்டு முதல் 1845 - ஆம் ஆண்டு வரையுள்ள ஐந்து ஆண்டுகள் நெல்லை பட்டணத்தின் கிறிஸ்தவர்கள் அதிக எதிர்ப்புகளைச் சந்தித்தனர். 1841 - ஆம் ஆண்டை ஏரல் எதிர்ப்புகள் (Erel Persecution) என்று கூறுகிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தின் கிழக்கு பகுதியிலுள்ள விசுவாசிகள் இந்த எதிர்ப்பை சந்தித்தனர். 1845 - ஆம் ஆண்டு நல்லூர் எதிர்ப்புகள் என்று கூறப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு பகுதி விசுவாசிகள் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தனர். திருச்சபைகள் அதிகம் சேதமாக்கப்பட்டது. விசுவாசிகள் தாக்கப்பட்டனர். பலர் விசுவாசத்தை விட்டு பின்வாங்கிச் சென்றனர். என்றாலும், ஐந்தாண்டு உபத்திரவத்திற்குப் பின் தேவன் பெரிய மாற்றத்தைக் கட்டளையிட்டார்.

பின்வாங்கிச் சென்ற விசுவாசிகள் மறுபடியும் கிறிஸ்துவண்டை வந்தனர். அதுமட்டுமல்ல, பல புதிய குடும்பங்கள் திருச்சபையில் சேர்ந்தனர். பாதிக்கப்பட்ட திருச்சபைகள் மறுசீரமைக்கப்பட்டது. கிராமம் கிராமமாக மக்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டனர். இது தேவனுடைய செயல், இது பிரமிப்பானது. திருச்சபைகள் பழைய மற்றும் புதிய விசுவாசிகளால் நிரம்பி வழிந்தது. இதில் போதகர் சார்ஜென்ட் அவர்களின் பங்கு இன்றியமையாதது. விசுவாசிகள் கிறிஸ்துவுக்குள் நிலைத்து நிற்கவும், விசுவாசத்தை காத்துக் கொள்ளவும் அரும்பாடுபட்டார்.  


பள்ளிக்கூடங்களின் தோற்றம்: 

போதகர் சார்ஜென்ட், எங்கெல்லாம் திருச்சபைகளை ஸ்தாபித்தாரோ, அங்கெல்லாம் அதனைச் சார்ந்த பள்ளிக்கூடங்களையும் ஆரம்பித்தார். மனித சமுதாயம் மாற்றம் பெறுவதற்கு கல்வி மிகவும் முக்கியமென்று உணர்ந்த போதகர், பள்ளிக்கூடங்களை அறிமுகம் செய்தார். இதனால் மிஷனெரி திருச்சபையையும், பள்ளிக்கூடத்தையும் சேர்த்து நிர்வகிக்கும் பொறுப்பை பெற்றார். இதனால் பல பள்ளிக்கூடங்கள் திருநெல்வேலியில் திறக்கப்பட்டது. குறிப்பாக, சாரா டக்கர் பள்ளி (Sarah Tucher Institution) உருவாக, தேவன் சார்ஜென்டை பயன்படுத்தினார். இன்று இந்நிறுவனத்தினர் மூலம் பெண்கள், பள்ளியிலும் கல்லூரியிலும் பயிலத் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டு சிறப்புற்று விளங்குகிறது. இதற்கு போதகர் எட்வர்ட் சார்ஜென்ட் அவர்கள் முக்கிய காரணமாக இருந்தார். 


டக்கம்மாள்புரம் வரலாறு :

போதகர் எட்வர்ட் சார்ஜென்ட், 1853 மற்றும் 1876 ஆகிய ஆண்டுகளில் பரிசுத்த திரித்துவ ஆலய விஸ்தரிப்பு பணிக்கு பொறுப்போடு இருந்து செயல்பட்டார். இங்கிலாந்திலுள்ள தன் நண்பர்களிடம் உதவி பெற்று, CMS சங்கத்திற்கு அநேக சொத்துக்களை வாங்க உதவினார். இதில் 1869 - ஆம் ஆண்டு வாங்கப்பட்ட ஆதாயூத்து என்ற ஊர் மிகவும் குறிப்பிடத்தக்கது. இதுவே இன்றைய டக்கம்மாள்புரம் ஆகும். இப்படி ஒவ்வொரு பகுதிக்கும், திருச்சபைக்கும் பின்னால் மிஷனெரிகளின் விலைக்கிரயத்தை நம்மால் காண இயலும். 


பேராயர் எட்வர்ட் சார்ஜென்ட்: 

திருநெல்வேலி பகுதியில் திருச்சபைகளும், விசுவாசிகளும் பெருகிக் கொண்டிருந்தனர். இவற்றை மேற்பார்வையிட சென்னையிலிருந்து ஒரு பேராயர் எப்போதாவது வந்து பணி செய்துவிட்டுச் செல்வது வழக்கம். வளர்ந்து வரும் திருநெல்வேலி திருச்சபைகளுக்கு இது போதுமானதாக இல்லை. ஆகவே அப்போதைய சென்னை பேராயர் ஜெல் அவர்கள் இரண்டு உதவிப் பேராயர்களை திருநெல்வேலியில் நியமித்தார். CMS சங்கத்திலிருந்து போதகர் எட்வர்ட் சார்ஜென்ட் அவர்களும், SPG சங்கத்திலிருந்து போதகர் ராபர்ட் கால்டுவெல் அவர்களும் உதவிப் பேராயர்களாக தெரிந்தெடுக்கப்பட்டனர்.

1877 - ஆம் ஆண்டு, மார்ச் 11-ஆம் நாள் கல்கத்தாவிலுள்ள தூய பவுலின் பேராயத்தில் இருவரும் பேராயர்களாக அபிஷேகம் பண்ணப்பட்டனர். பிரதிஷ்டை விழாவில் தேவ பிரசன்னம் ஆலயத்தை நிரப்பியது. பிரதிஷ்டை முடிந்தவுடன், பேராயர் ஜெல் அவர்கள் வழங்கிய அருளுரையில், இருவரையும் திருநெல்வேலி மாவட்டத்தின் "இரட்டை நட்சத்திரங்கள்" என்று வர்ணித்தார். பிரதிஷ்டை முடிந்து இருவரும் தமிழகம் திரும்பும்போது இரு பகுதி மக்களும், இருவருக்கும் பிரம்மாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அரசு வரவேற்பு கொடுக்கப்பட்டதாக சரித்திரம் கூறுகிறது. இருவரும் வெவ்வேறு சங்கங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், இசைந்த மனதோடு திருநெல்வேலியை மையமாக வைத்து பணியாற்றினார்கள். 

குருவானவர்களுடன் உறவு: 

குருத்துவப் பயிற்சி கொடுப்பதற்காக பாளையங்கோட்டையில் ஆரம்பிக்கப்பட்ட பள்ளியில், 500க்கும் அதிகமான சுதேச ஊழியர்களுக்கு குருத்துவ பயிற்சி அளித்துள்ளார். 25 ஆண்டுகள் அதன் தலைமைப்பொறுப்பில் இருந்து 500 குருமார்களுக்கு பயிற்சி கொடுத்து, அவர்களை சிறந்த குருவானவர்களாக உருவாக்கியுள்ளார். இது ஒரு சரித்திரப்பூர்வமான நிகழ்வாகும். ஒவ்வொரு குருவும், அவரோடுகூட மாதத்திற்கு ஒருமுறை உணவருந்தி ஐக்கியம் கொண்டு வந்தார். அவர்களோடு மனம் திறந்து பேசி, அவர்கள் குடும்ப காரியங்களை அறிந்து அவர்களோடு ஜெபித்து தன் நேரத்தை அவர்களோடு செலவிட்டார். எல்லா குருவானவர்களும் இணைந்து சந்திக்கும் நிகழ்வையும் வைத்திருந்தார். திருச்சபைகள் சிறந்து இயங்க, இவ்விதம் குருவானவர்களை ஊக்கப்படுத்தினார். திருநெல்வேலியிலுள்ள குக்கிராமங்கள் முதல் அனைத்து பகுதிகளிலும் இயங்கி வந்த திருச்சபைகள் ஒவ்வொன்றையும் சந்தித்து, அங்கு பணியாற்றிய குருவானவர்களுடன் பக்கபலமாக இருந்து செயல்பட்டார். 1883 - ஆம் ஆண்டு ஒரே வாரத்தில் எட்டு குருமார்கள் மரித்து விட்டார்கள். இச்செய்தி சார்ஜென்ட் அவர்களின் உள்ளத்தை அசைத்தது.

நற்போதகம் பத்திரிக்கை: 

1849 - ஆம் ஆண்டில் ஆங்காங்கே பணியாற்றி வந்த சபை ஊழியர்கள் கிரமமாக இறையியலை அறிந்து கொள்ள வேண்டுமென விரும்பினார். நற்போதகம் என்ற மாதாந்திர பத்திரிகையை வெளியிட்டு அதன் மூலம் இறையியல் கருத்துக்களை கற்றுக் கொடுத்தார். இப்பத்திரிகை இன்றளவும் வெளியிடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மனைவியின் பங்கு: 

பேராயர் எட்வர்ட் சார்ஜென்ட் அவர்கள் மனைவியின் பங்கு திருநெல்வேலி பெண்களின் வாழ்வில் அதிக மாற்றத்தை ஏற்படுத்தியது. பேராயர் ஊழியத்தில் ஈடுபடும் போது, மனைவி மேரி சார்ஜென்ட் அம்மா அவர்கள் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளை பொறுப்பேற்று கிறிஸ்துவுக்குள்ளும் ஒழுக்கத்திலும் வழிநடத்தி வந்தார்கள். ஆகவேதான், இன்று அப்பள்ளி மேரி சார்ஜென்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியாக உயர்ந்திருக்கிறது. அவர்களுடைய உழைப்பை நினைவு கூறும் வண்ணமாக பிஷப் சார்ஜென்ட் ஆசிரியர் பயிற்சி பள்ளி உருவானது. இதுபோன்று அநேக கல்வி நிறுவனங்கள் நெல்லை திருமண்டலத்தில் இன்றும் உருவாக்கப்பட்டு வருகிறது. 

சமூக சேவை : 

மதுப்பழக்கத்தை ஒழிக்க தீவிர திட்டங்கள் கொண்டு வந்தார். கைம்பெண் ஆதரிப்பு சங்கத்திற்கு புத்துயிர் அளித்தார். சாதியை எதிர்த்துப் போராடினார். சபை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய விசுவாசத்தில் உறுதியாயிருங்கள், ஒருவரையொருவர் நேசியுங்கள் என்று கூறிய பேராயர் எட்வர்ட் சார்ஜென்ட் வெறும் பேச்சில் மட்டுமல்ல, அதன்படி வாழ்ந்தும் காட்டினார். சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கு தன் பலத்திற்கு மிஞ்சி பணியாற்றினார் என்றே கூறலாம். இவரது பணியால் பயனடைந்தோர் ஏராளம், ஏராளம். இன்றும் நெல்லைப் பட்டணம் இவருக்கு நன்றியுள்ளதாகத் திகழ்கிறது. 

பேராயர் எட்வர்ட் சார்ஜன்ட் 13 ஆண்டுகள் பேராயராக நெல்லை திருமண்டலத்தில் பணியாற்றினார். 18 வயதில் ஆரம்பிக்கப்பட்ட இவரது ஊழியம், 46 ஆண்டுகள் தொய்வில்லாது நடைபெற்றது. நெல்லை திருமண்டலத்தின் கிராமங்கள் முதல் முக்கிய பகுதிகள் வரை எழும்பியுள்ள ஆலயங்கள் அதற்கு சிறந்த சாட்சி! ஆரம்பத்தில் 224 திருச்சபைகள் இருந்தது. ஆனால் பேராயர் எட்வர்ட் சார்ஜென்ட் மரிக்கும் போது 1008 திருச்சபைகளும், 56,297 விசுவாசிகளும் உருவாகி இருந்தது. எத்தனை மகத்தான பணி! ஊழியம் விரிவடைந்தது. பிரச்சனைகளும் உருவானது. ஆனால் பேராயர் அவற்றை மிகவும் ஞானமாகக் கையாண்டார். உடல் நலத்தில் அவருக்கு குறைவு ஏற்பட்டது. 11.10.1889 அன்று திருநெல்வேலி மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் மிஷனெரிகள், சபை ஊழியர்கள், போதகர்கள், குருவானவர்கள் மற்றும் விசுவாசிகள் என ஆயிரக்கணக்கானோர் பாளையங்கோட்டையில் குவிந்தனர். அவர்கள் முகத்தில் வேதனையும், சோகமும் காணப்பட்டது. 'மக்கள் பேராயர்' என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட பேராயர் எட்வர்ட் சார்ஜென்ட் அவர்கள் இவ்வுலக ஓட்டத்தை முடித்து விட்டு தேவ இராஜ்ஜியம் சென்றடைந்தார். 

"ஒரே ஒரு வாழ்வு; அது சீக்கிரம் கடந்திடும். கிறிஸ்துவுக்காக சாதிப்பது மட்டுமே நிலைத்து நிற்கும்".

Comments

Popular posts from this blog

பக்த்சிங் Bakht Singh

Dr.Ida Scudder டாக்டர். ஐடா ஸ்கடர்

THOMAS WALKER தாமஸ் வாக்கர்